கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2703 days ago
கரூர்: கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பில், விமரிசையாக நடந்தது. கரூர், அமராவதி ஆற்றங்கரையோரம், ஐந்து ரோட்டில் உள்ள, புகழ்பெற்ற கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது, 29 மாலை, ஒன்றாம் கால யாக சாலை பூஜை, 30ல், இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை முடிந்த பின், யாகசாலையிலிருந்து, சிவாச்சாரியார்கள், புனித நீரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின், ராஜ கோபுரம், பாலம்பிகை கோபுரம், விநாயகர், சண்முகர், நவகிரஹங்கள் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், 9:30 மணியளவில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலும் பூனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.