கோட்டை பூவாத்தம்மனுக்கு பால் அபிஷேகம்
செஞ்சி: செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு 28 வது ஆண்டாக ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பால் அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி கிருஷ்ணகிரி மலையடிவாரம் உள்ள பூவாத்தம்மன், ராஜகிரி மலையடிவாரம் உள்ள செல்லியம்மனுக்கு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 28 வது ஆண்டாக பால் அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சுந்தரவிநாயகர், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்செய்து காலை 11 மணிக்கு 200க்கும் மேற்பட்டவர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். சிங்கவரம் சாலை, தேசூர்பாட்டை வழியாக செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவிலுக்கு வந்தனர்.பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.