மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவில் ஆடிக் கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. கோவில் கோபுர வாசல் எதிரில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். பக்தர்கள் தேரடிவீதி மற்றும் நெல்லி, புளியந்தோப்பு போன்ற பல இடங்களில் அன்னதானம் வழங்கினர். பெண்கள், குழந்தைகள் என பலரும் அலகுகள் குத்திக் கொண்டும், கோவில் வளாகத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பரமணியர் சுவாமி மலை வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.