திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு மரம் ஏறுதல் உறியடி திருவிழா
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உறியடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.
ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் மலைக்குன்றில் கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின், மலையில் இருந்து புறப்பட்ட சுவாமி, எல்லைப்பட்டி, எர்ணம்பட்டி, முத்துராம்பட்டி, குளத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி, டி.புதுப்பட்டி, எஸ்.வாடிப் பட்டி, எஸ். அய்யம்பட்டியில் திருக்கண் காணும் நிகழ்வு நடந்தது.
மாலையில் கொத்தப்புளி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வந்தடைந்தார். அங்கு சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி 30 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. தொடர்ந்து உறியடித்திருவிழா நடந்தது. இன்று (செப்., 6ல்) காலை மீண்டும் சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.