உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’பொல்லாதவர் ’ சாப்பிட்ட பொங்கல்

’பொல்லாதவர் ’ சாப்பிட்ட பொங்கல்

பிள்ளைக் கடவுளான விநாயகரும் ’பொல்லாப் பிள்ளையார்’ என பெயர் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்றை படித்தால் அதற்கான காரணம் புரியும்.  சம்பந்தர், அப்பர்,  சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் கோயிலில் உள்ள விநாயகருக்கு தினமும் நைவேத்யம் செய்வது வழக்கம். ஒருமுறை தந்தை வெளியூர் சென்றதால்  பூஜை செய்ய சிறுவனான நம்பியாண்டார் நம்பியை அனுப்பினார். பொங்கல் படைத்த நம்பி, அதை சாப்பிடும்படி விநாயகரை வற்புறுத்தினார். நேரம் கடந்து கொண்டிருந்தது. ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை.  மனம் வருந்திய அவர் விநாயகர் சிலையில் முட்டி அழுதார்.

அவரது பக்திக்கு கட்டுப்பட்ட விநாயகர்  பொங்கலை சாப்பிட்டார். அன்று கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவில்லை.  விநாயகரே சாப்பிட்டதாக நம்பி தெரிவிக்க யாரும் நம்பவில்லை.  தகவலைக் கேள்விப்பட்ட மன்னர் ராஜராஜசோழனுக்கு உண்மையை அறிய ஆவல் எழுந்தது.  பொங்கலுடன் கோயிலுக்கு வந்த மன்னர், அதை நைவேத்யம் செய்யும்படி கூறினார்.  விநாயகர் அதை  சாப்பிடாமல் தாமதிக்கவே, நம்பியாண்டார் நம்பி பாடல்கள் பாடினார். இதுவே  ’இரட்டை மணிமாலை’  எனப்படுகிறது. மனமிரங்கிய விநாயகர் அனைவரும் அறிய சாப்பிட்டார். இந்த விநாயகரின் சிலை உளியால் செதுக்கப் படாதவர்  என்பதால் ’பொள்ளாப் பிள்ளையார்’ என அழைக்கப் பட்டார். ’பொள்ளா’ என்றால் ’செதுக்கப்படாத’ என்பது பொருள். நாளடைவில் ’பொல்லாப்பிள்ளையார்’  என்றாகி விட்டது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் திருநாரையூர் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !