காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில் குடிநீர் மையம் பழுது
ADDED :2621 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பழுதாகியுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் வந்து செல்கின்றனர். இங்கு, எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், கொடிமரம் அருகே, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இயந்திரம் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால், தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, கோவில் அலுவலர் கூறியதாவது:சுத்திகரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கூறியுள்ளோம். விரைவில் பழுது நீக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.