சஷ்டியும் அகப்பையும்
ADDED :2564 days ago
திதிகளில் சஷ்டி ஆறாவதாகும். ஐப்பசி அமாவாசையை அடுத்து வரும் பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய திதிகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது சஷ்டி விரதம். நீண்டகாலமாக குழந்தை இல்லாதவர்கள் குறை தீர இதை மேற்கொள்வர். பால், பழம், எளிய உணவுகளைச் சாப்பிட்டு விரதமிருப்பர். இதனால் கர்ப்பப்பை குழந்தையைத் தாங்கும் சக்தி பெறும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற சொலவடை உண்டு. நிறைய பணம் இருந்தால் தானே செலவழிக்க முடியும் என்று கருதி இதைச் சொல்லவில்லை. சஷ்டி திதியன்று விரதமிருந்தால் தான் அகப் பையில் (உள்ளுக்குள் இருக்கும் கர்ப்பப்பை) குழந்தை தங்கும் என்று கருதி சொல்லப்பட்டது. கடற்காற்றும், உணவு முறையில் மாற்றமும் கருத்தரிக்க தூண்டுகோலாக உள்ளதால், திருச்செந்துாரில் இதை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.