உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு

சபரிமலை:சபரிமலையில் இன்று (நவம்., 17ல்) அதிகாலை 3:00 மணிக்கு தொடங்கும் மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை நேற்று (நவம்., 16ல்) மாலை 5:00-க்கு திறந்தது. கடந்த ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கி பதவி நிறைவு பெறும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார்.

பின்னர் கணபதி கோயிலில் விளக்கேற்றி விட்டு 18ம் படி வழியாக இறங்கி சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார். பின்னர் கோயிலுக்கு திரும்பும் போது 18ம் படிக்கு கீழே நின்ற புதிய மேல்சாந்திகள் சபரிமலை- வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம்- நாராயணன் நம்பூதிரி ஆகியோருக்கு மாலை அணிவித்து 18-ம் படி வழியாக அழைத்து வந்தார். அவர்கள் கோயில் முன்புறம் வந்ததும் அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு 7:00 மணிக்கு சபரிமலை புதிய மேல்சாந்தி கே.வி.வாசுதேவன் நம்பூதிரி, கோயில் முன்புறம் தரையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தி நீரால் அபிஷேகம் செய்தார். பின்னர் அவரது காதில் ஐயப்பன் மூல மந்திரத்தை சொல்லிக்கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றார்.

இது போல் நாராயணன் நம்பூதிரிக்கு மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடந்த சடங்கில் தந்திரிஅபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்குள் அழைத்து
சென்றார்.இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று (நவம்., 17ல்) அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி கே.வி.வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், தந்திரி அபிஷேகம் நடத்திய பின்னர் மண்டலகால நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். வரும் 41 நாட்களிலும் காலை 3:15 மணி முதல் பகல் 12:00 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அனைத்து நாட்களிலும் காலை 7:30க்கு உஷபூஜை, பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை, மாலை 6:30-க்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 10:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

* மண்டல பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், நேற்று (நவம். 16ல்) நடை திறக்க , சன்னிதானத்திற்கு வந்த புதிய மேல்சாந்திக்கு, விபூதி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !