பொங்கலுாரில் சோடஷ மகாலட்சுமி யாகம்: ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பூர்:திருப்பூர் அருகே, பொங்கலுாரில் வரும் 23ம் தேதி மகாலட்சுமி மகா யாகம் துவங்குகிறது. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தொழில்வளம், விவசாய வளர்ச்சி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகிடவும், உலக நன்மை பெற வேண்டியும் இந்து முன்னணி சார்பில், திருப்பூரை அடுத்த பொங்கலுாரில், வரும் 23 முதல், 25 வரை கோமாதா பூஜை, அஷ்வ பூஜை, சோடஷ மகாலட்சுமி மகாயாகம் நடத்தப்படுகின்றன.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:வரும் 23ம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, காலை, 8:00 மணிக்கு கஜபூஜை; 10:00 மணிக்கு, 108 குதிரைகளை கொண்டு அஷ்வ பூஜை; மாலை, 3:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, 1,008 நாட்டு மாடுகளை கொண்டு கோமாதா பூஜை; மாலை, 3:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது.அடுத்து, 25ம் தேதி மதியம், 2:00 மணிக்கு சோடஷ மகாலட்சுமி மகாயாகம் நடக்கிறது. இதுவரை, அஷ்வ பூஜை எங்கும் நடைபெறாத ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு பசுவுக்கும் தனி, தனியாக தடுப்பு அமைக்கப்பட்டு, எவ்வித இடையூறும் இல்லாத வகையில் பசுமாடுகள் நிறுத்தப்பட உள்ளன. 16 லட்சுமிகளுக்கான பூஜை, யாகம் நடக்கிறது.மூன்று நாள் விழாவில், நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், கருப்பணன், தங்கமணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.சிறப்பு ஏற்பாடுமூன்று நாள் விழாவில், பங்கேற்பவர்களுக்கு அன்னதானம், வழங்க, 100 கவுன்டர்கள், 50 இடங்களில் ராட்சத குடிநீர் தொட்டி, 15 இடங்களில், பெரிய எல்.இ.டி., டிவி, 500 நடமாடும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. 17 இடங்களில் பார்க்கிங் வசதி, ஏழு இடங்களில் பிரமாண்ட நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், பல்லடம், அவிநாசிபாளையம் பகுதியில் இருந்து பொங்கலுாருக்கு வர, சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. யாகம் நடக்கும் இடத்தை நேற்று டி.ஐ.ஜி., கார்த்திகேயன், எஸ்.பி., கயல்விழி பார்வையிட்டு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.