உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டையில் ஊரணியை தூர்வார இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு

அருப்புக்கோட்டையில் ஊரணியை தூர்வார இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ஊரணியை தூர் வார இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூற்றாண்டு புகழ் வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இக் கோயிலின் தெப்பம் சூரிய புஷ்கரணி என்றழைக்கப்படும்.

தெப்பத்திற்கு நீர் வரும் பிறமடை ஊரணி கோயிலுக்கு அருகில் உள்ள திருச்சுழி மெயின் ரோடு அருகே உள்ளது. இவ்வூரணியில் மழை காலத்தில் நீர் நிறைந்து, உபரி நீர் தெப்பத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரணியை பராமரிப்பு செய்யாததால், நகரில் உள்ள ஒட்டு மொத்த குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன. ஊரணியை மூடபட்டு தற்போது குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.

முட்புதர்கள் செடிகள் வளர்ந்து காடு போல் உள்ளது. நகராட்சியும் தன் பங்கிற்கு பல லட்சம் செலவில், ஊரணியில் கழிவு செல்லும் ஓடையை அமைத்துள்ளது.

ஊரணியில் கட்டட ஆக்கிரமிப்புகளும் உள்ளது.தற்போது கோயில் நிலங்களை கையகப் படுத்தும் பணியை அரசு செய்து மேற்கொண்டு வருகின்றது. பிறமடை ஊரணியை தூய்மைப் படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஊரணியின் மொத்த பரப்பளவு ஒரு ஏக்கர் 88 சென்ட் இடத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கையில் இறங்கி யுள்ளது.

முதற் கட்டமாக நகரின் சமூக தொண்டு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி களை அழைத்து ஊரணியை தூய்மைபடுத்துவது குறித்தான ஆலோசனை நடத்தியுள்ளது. ஊரணியை தூய்மைப்படுத்த உதவும்படி ஊரணிக்கு அருகில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஊரணியை தூய்மைபடுத்தி, மீட்டெக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

இதேபோன்று, கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் ஆக்கிரமி ப்பில் உள்ளன. அவற்றையும் கண்டறிந்து கோயில் நிர்வாகம் மீட்டெடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !