மயிலை கபாலிஸ்வரர் பங்குனி பெருவிழா: 11ல் துவக்கம்
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா, 11ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில், பிரசித்திப் பெற்றது. பிற்கால கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில், நாற்புறமும் மாடவீதிகள், கோபுரங்கள், குளம் ஆகியவற்றுடன் விளங்குகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி பெருவிழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான, 10 நாள், பங்குனி பெருவிழா, 11ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளான, 11ம் தேதி காலை, 6:40 மணி முதல், 7:30 மணிக்குள், கொடியேற்ற விழா நடக்கிறது. 13ல், அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. 14ல், வெள்விடை பெருவிழா காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, தேர் திருவிழா, 17ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:00 மணிக்கு, கபாலீஸ்வரர், தேரில் எழுந்தருள்கிறார். அன்று, ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.வரும், 20ல், தீர்த்தவாரி உற்சவம், புன்னை மரத்தடியில், சிவ வழிபாடு நடக்கிறது. அன்று மாலை, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 22ம் தேதி, விடையாற்றி உற்சவம் துவங்குகிறது.