பூசாரி மட்டுமே தீ மிதிக்கும் விழா: தாளவாடியில் குவிந்த பக்தர்கள்
சத்தியமங்கலம்: தாளவாடியில், பூசாரி மட்டுமே தீ மிதிக்கும் வினோத விழாவில், 5,000 பக்தர்கள் பங்கேற்றனர். தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு குண்டம் விழா நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) தொடங்கியது.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) காலை முதல் மாலை வரை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவில் மலர் அலங்காரம் செய்து, திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டது.
தாளவாடி நகர் முழுவதும் சென்ற அம்மனை, வீதிகளில் கோலமிட்டு, மக்கள் வரவேற்றனர். நேற்று (மார்ச்., 20ல்) காலை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்பேத்கர் வீதியில் உள்ள, விநாயகர் கோவிலுக்கு,அம்மன் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக மலர்ப்பாதை
அமைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, கோவில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணியளவில், கோவில் பூசாரி சிவண்ணா குண்டம்
இறங்கினார். பின், விசேஷ பூஜை, தீபாராதனை நடந்தது. தீ மிதி விழாவில், பூசாரியை தவிர, மற்ற யாருக்கும் குண்டம் மிதிக்க அனுமதியில்லை. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.