சத்தியமங்கலம் பண்ணாரி கோவிலில் மறுபூஜை: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
ADDED :2533 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, மறுபூஜையுடன் நிறை வடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த, 19ல் அதிகாலை தொடங்கி, மாலை வரை நடந்தது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்.
இந்நிலையில் பண்ணாரி கோவிலில், மறு பூஜை நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. இதையொட்டி சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மறுபூஜையுடன், குண்டம் விழா, நிறைவு பெற்றதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.