திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏர்பூட்டுதல் விழா
  திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் மலைக்கு பின்புறமுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தில் நான்கு ஏர்பூட்டி உழும் பாரம்பரிய விழா நடந்தது. 
இக்கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது. சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம், திருவிளக்கு பூஜை நடந்தன. விவசாயிகள் குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில்ஆணி அடித்து பூ சுற்றி கோயிலில் தரிசனம் முடித்து மலையை சுற்றிவந்து நான்கு ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்திலுள்ள கோயில் நிலங்களை உழுதனர்.கல்வெட்டு குகை கோயில் முன் கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி திருவிழா கொண்டாட்டம், விவசாயம் மற்றும் தொழில்களுக்கான கூலி நிர்ணயம் குறித்து ஆலோசித்தனர்.விவசாயம் செழிக்கவும் மக்கள் நலம் பெறவும் வேண்டி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோயில் திருவாட்சி மண்டபத்தில் இரவு, பக்தர்கள் முன்னிலையில் இந்த ஆண்டு மழை, கோயில் முக்கிய திருவிழாக்கள் உட்பட நடப்பு ஆண்டு சாதக, பாதக பலன்கள் குறித்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.