தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று(ஏப்.,27) ஏராளமான பக்தர்கள், இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு. காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட, பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பகல், 12:00 மணிக்கு, உற்சவர் தட்சணகாசி காலைபைரவர், கோவிலை மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது.