திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், சனிக்கிழமையான நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால், திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
நவக்கிரக ஸ்தலங்களில், சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.தற்போது, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சனிக்கிழமையான நேற்று முன்தினம், அதிகாலையிலிருந்தே பக்தர்கள் குவிந்தனர். நளன் குளத்தில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், பிரசாதம் வழங்கப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக, கோவில் எதிரில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.