கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அட்சய திருதியை நாளான இன்று பன்னிரண்டு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது திதியான அட்சய திருதியை தினமான இன்று, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு டி.எஸ்.ஆர்., பெரியதெருவில் அமைத்துள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிக்கும் கருடசேவை விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சாரங்கபாணிசுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி, ஆதிவராகசுவாமி, ராஜகோபாலசுவாமி, பாட்சாரியார் தெரு கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமசுவாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி, மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி, புளியஞ்சேரி வேணுகோபால்சுவாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி ஆகிய கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேயர் எழுந்தருளினார். இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் வந்தவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் காட்சி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.