மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
பேரூர்: பேரூரில் ஸ்ரீ மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் சாம வேத பாடசாலை திறப்பு விழா, நேற்று நடந்தது.பேரூரில் பிரம்ம உற்சவ காலங்களில் சாம வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம் அன்னதானம் நடைபெற்று வந்த, 120 ஆண்டுகள் பழமையான பாராயண மடம் உள்ளது.
இங்கு, ஸ்ரீ காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மஹா பெரியவா) மணிமண்டபமும், சாம வேத பாடசாலையும் அமைக்கப்பட்டது. முன்னதாக, காஞ்சி மஹா பெரியவர் திருவுருவ விக்ரஹத்தை சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, பாலக்காடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து சென்று, பூரணகும்ப வேத மரியாதையுடன், பூஜை ஆராதனைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை, ஆதிசங்கர், வேத வியாஸர் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திரர் விக்ரஹங்கள் அமைக்கப்பட்டன.மஹா கும்பாபிஷேகம் மற்றும் சாம வேத பாடசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு வேதபாராயணம், 7:30க்கு ஆறாம் கால யாக பூஜை, 10:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 11:00க்கு மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீ மஹா பெரியவா திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, திருச்சி ப்ரணவானந்த சரஸ்வதி அவதுாத சுவாமிகள், நங்கநல்லுார் காமாட்சி சுவாமிகள், மருதாநல்லுார் கோதண்டராம சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தனர்.மஹா கும்பாபிஷேகத்தை, தஞ்சாவூர் சிவக்குமார் சாஸ்திரிகள் நடத்தி வைத்தார்.