உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்

பாதூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக குண்டத்தில் பழவகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் அருணாசல குருக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினார். பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல வகை பழங்கள், பால், தயிர், நெய் யாக குண்டத்தில் கொட்டப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !