பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா
ADDED :2576 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி, நேற்று (ஆக., 16ல்) பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோயில் வளாகத்தில் தீர்த்தவாரி மண்டபம் முன் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 12 வகையான நெய்வேத்தியங்கள் பூஜை செய்யப்பட்டன.
பின்னர் ரதவீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு சங்கு, சேகண்டி, மேள, தாளம் முழங்க, அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க, பாகவதர்கள் பக்தி பாடல்கள் இசைத்தபடி சென்றனர்.
இரவு சந்நதி கருடனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, கொடியிறக்கப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.