சேலம் விநாயகர் சிலைகளில் ரசாயனம்; ஆய்வு மேற்கொள்ள அறிவுரை
ADDED :2379 days ago
சேலம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சேலம், கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை ஆலோசனை கூட்டம், நேற்று 22ம் தேதி நடந்தது.
அதில், கலெக்டர் ராமன் பேசியதாவது: களிமண்ணால் செய்யப்பட்டு, எந்த ரசாயன கலவையு மின்றி, கிழங்கு மாவு, ஜவ்வரிசி கழிவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலக்கூறுகளை கொண்ட சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்து கோட்டங்களிலும், விநாயகர் சிலை தயாரிப்பு, விற்பனை இடங்களில், துணை தாசில்தார் அளவில் அலுவலர்கள், மாசு கட்டுப்பாடு அலுவலர்கள், போலீசார் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.