ஆர்.எஸ்.மங்கலம் அய்யனார் கோவில் விழாவிற்கு ஊர் கூடி பனை
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் விழாவை முன்னிட்டு ஊர் கூடி பனை மட்டையில் வடம் திரிக்கும் பணியில் கிராமத் தினர் ஈடுபட்டுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே சித்துார்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் ஆக., மாதத்தில் மாரியம்மன் கோவிலுக்கு முளைப்பாரி விழாவும், ஊரின் காவல் தெய்வமான கொல்லாருடைய அய்யனார் கோவிலுக்கு எருதுகட்டு விழாவும் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் கொல்லாருடைய அய்யனாருக்கு ஆண்டு தோறும் புதிதாக பனை மட்டையில் இருந்து நார் எடுத்து அவைகளை உலர்த்தி பின்பு அவைகளை சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு வடமாக ( பெரிய கயிறு போன்று) திரிக்கப்பட்டு விழா நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினர் வசித்து வரும் நிலையில், இந்த வடம் பின்னுவதற்கு கிராமத்தில் இருந்து வீட்டிற்கு ஒரு ஆள் வீதம் கோவில் எல்லையில் கூடி, ஒற்றுமையாக வடம் திரித்து விழா ஏற்பாடுகளை செய்து மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.