காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழா!
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். நடப்பாண்டுக்கான குண்டம், தேர்த்திருவிழா, மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு, பூச்சாட்டுடன் துவங்கியது. 24ம் தேதி இரவு, 8.30க்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அன்றிரவு, 10.30க்கு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது. பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று அதிகாலை, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்தது. நெரிசல் இல்லாமல் பக்தர்கள் கோவிலை வலம் வந்து, கோவிலின் பின்புறம் உள்ள காரைவாய்க்காலில் குளித்து விட்டு, குண்டத்தில் இறங்கும் வகையில், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 9 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டு, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று குண்டம் திருவிழாவையொட்டி, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை, 5.30க்கு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் தலைமை பூசாரிகளான லட்சுமணன், செந்தில்குமார், பிரபாகரன் ஆகியோர் குண்டம் இறங்கினர். அதிகாலை 3 மணி முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் காரைவாய்க்காலில் குளித்து பின், குண்டம் இறங்கினர். பலரும், தங்கள் குழந்தையை கையில் ஏந்தியபடி குண்டம் இறங்கினர். நேற்றிரவு 9 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று காலை 9.30க்கு பொங்கல் வைத்தல், மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. 7ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் எடுத்தல், மஞ்சள் நீர் விழா நடக்கிறது. 8ம் தேதி காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.