பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
சென்னிமலை: பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலிகொடுத்து, பக்தி பரவசத்துடன் மாரியம்மனை வழிபட்டனர்.
சென்னிமலை அடுத்துள்ள, முகாசிபிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த, 8 ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15ல் கம்பம் நடுதல் நடந்தது. கம்பத்துக்கு தினமும் பெண்கள், மஞ்சள் நீர் ஊற்றி, வேப்பிலை அலங்காரம் செய்து, மஞ்சள் பூசி வழிபாடு நடத்தினர். சிலர், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், பக்தி பரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
* ஈங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 8 ல்துவங்கியது. இங்கு நடப்பட்ட கம்பத்திற்கு, தினமும் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று மாவிளக்கு, பொங்கல் விழா நடக்கிறது.
* சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று இரவு பூச்சாட்டுதலூடன் துவங்கியது, வரும், 30ல் கம்பம் நடுதல், நவ., 7ல் பொங்கல் விழா நடக்கிறது.