உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்

பூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே  பூர்வீக வீட்டில்  பாம்பு புற்று உள்ளதால்  17 ஆண்டுகளாக அந்த வீட்டில் இருந்தவர்கள்  வேறு வீட்டில் வசித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் மணல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வசந்தி 36. இவரது கணவர் பிரகாஷ். பட்டுப் புடவை வியாபாரம் செய்து வருகிறார். வசந்திக்கும்  அவரது சகோதரர் வெங்கட்ராஜன்  33  என்பவருக்கும் சொந்தமான பூர்வீக வீடு உள்ளது.

அந்த வீட்டுக்குள் உள்ள பெரிய புற்றில்  நாகப்பாம்பு இருப்பதால்  17 ஆண்டுகளாக  அந்த வீட்டில் வசிக்காமல்  அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். வசந்தி கூறியதாவது: பூர்வீக வீட்டின் உத்திரத்தில் இருந்த நாகப்பாம்பு ஒன்றை  பெற்றோர் அடித்துக் கொன்று விட்டனர். ஓராண்டுக்கு பின்  வீட்டிற்குள்ளேயே உருவான பெரிய புற்றுக்கு  நாகப்பாம்பு ஒன்று மீண்டும் வந்து விட்டது. யாரையும் தொந்தரவு செய்யாததால் பாம்புக்கு இடையூறாக இருக்க வேண்டாம் எனக் கருதி  பெற்றோர் வீட்டை காலி செய்து  அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டனர். பெற்றோருக்கு பின் நாங்களும்  புற்றுக்கு மஞ்சள் தெளித்து  வழிபட்டு வருகிறோம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வணங்கிச் செல்கின்றனர். இவ்வாறு  அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !