சனாதன தர்மம் - 9
பூமித்தாயைப் பாதுகாப்போம்'வையம் முழுவதும் படைத்தளிக்கின்றவள். அருமணிகளைத் தன்னிடம் கொண்டவள். பொற்கும்பமாகிய மார்பில் தீயைச் சுமந்தவள். ஆகாசமே அவள் கணவன். அவள் நமக்கு அருள் செய்யட்டும்' இது அதர்வண வேதத்திலுள்ள சூக்த மந்திரத்தின் ஒரு பகுதி. இந்த பூமி தான் நமக்கு சாமி என்கிறது சனாதன தர்மம். இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பதன் வெளிப்பாடு தான் வழிபாடு. சிவத்தலமான காசியைப் பெரிதும் மதித்தார் பகவான் ராமகிருஷ்ணர். அதன் எல்லைக்குள் இயற்கை உபாதையை கழிக்க அஞ்சி எல்லை தாண்டி வந்து போனார். குருநாதரைப் பின்பற்றிய விவேகானந்தரும் வெளிநாட்டு பயணம் முடித்து வரும் போது மன்னர் பாஸ்கர சேதுபதியின் வரவேற்பை ஏற்று கால் பதித்த இடம் ராமேஸ்வரம் அருகிலுள்ள குந்துக்கால். இங்கு பாரதத்தாயின் திருவடிகளில் அவர் விழுந்து வணங்கினார். காலை எழுந்ததும் பூமியைத் தொட்டு வணங்கி, 'பூமித்தாயே! கடல்களை ஆடையாகவும், மலைகளை மார்பகங்களாகவும் கொண்டவளே! திருமாலின் துணையே! வணக்கம்' என்று போற்றியே அன்றாட வாழ்வை தொடங்குகிறோம். நிலத்தின் பயன்பாடு, வாழ்வியல் முறைகளின் அடிப்படையில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக பிரித்தனர். மலையும், மலை சார்ந்த நிலத்தை குறிஞ்சி எனவும், காடும், காடு சார்ந்த நிலத்தை முல்லை எனவும், வயலும், வயல் சார்ந்த நிலத்தை மருதம் எனவும், கடலையும், கடல் சார்ந்த பகுதியை நெய்தல் எனவும், மணல் பரப்பையும், அதன் சார்ந்த பகுதியை பாலை எனவும் அமைத்து வாழ்வு நடத்தினர். பூவைச் சேதப்படுத்தாமல் வண்டு தேனை எடுப்பது போல மனிதனும் தான் வாழ்ந்த நிலம், இயற்கையை சேதப்படுத்தாமல் வாழ்ந்தான். ஆனால் தற்போது அறிவியல் வளர்ச்சியால் ஐவகை நிலங்களும் பாழாகி விட்டன. மலை முழுங்கி மகாதேவன் என்றொரு பழமொழி உண்டு. அதுபோலத் தான் இன்று பல இடங்களில் மலைகளை காணவில்லை. ஒவ்வொரு மனிதனும் வீடு கட்டும் போது தங்கள் வீட்டுத் தரைகளின் அழகை ரசிக்கும் அதே தருணத்தில் எங்கோ இயற்கை அழிக்கப்படுகிறது என உணர்வதில்லை. கண்களை விற்று சித்திரம் வாங்கும் நிலையில் நாம் இருக்கிறோம். ஆறுகளில் தண்ணீர் ஓடாவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் மணலையும் கூட அடி ஆழம் வரையில் வழித்து எடுக்கும் அவலத்தை நாம் சிந்திப்பதில்லை. மலைகள். ஆறுகள். காடுகளை அழிக்கும் போது இயற்கை சமநிலை இழந்து பூகம்பம் உருவாகிறது. இயற்கை தன்னைத் தானே சமப்படுத்த தயாராகும் போது மனிதன் காணாமல் போவான் என்பதை உணர்ந்தே சனாதனம் இயற்கையை போற்றச் சொன்னது. ரஷ்யாவின் மன்னன் ஒருவன், மக்களுக்கு ஓர் அறிவிப்பு விடுத்தான். நாளை சூரியன் உதித்ததும் போட்டி வைக்கப்படும். அதில் யார் ஒருவர் எவ்வளவு துாரம் ஓடுகிறாரோ அத்தனை நிலமும் அவரவருக்கே சொந்தமாகி விடும் என அறிவித்தான். அனைவரும் ஓடத் தொடங்கினர். ஒரே ஒருவன் மட்டும் மதியம் வரை ஓடினான். இனி ஓட முடியாது என நிலையிலும் ஓயவில்லை. ஓரிடத்தில் மயங்கி விழுந்து உயிர் விட்டான். 'பேராசையால் ஓடியதால் பலன் கிடைக்கவில்லை. ஆறடியே இவனுக்கு போதுமானது' என்றார் மன்னர். ஆம்... பூமியை பாதுகாத்து வாழ்வதோடு நம் தலைமுறைைய வாழ வைப்போம். குழந்தையின் விரல் பட்டதும் தாயின் மார்பில் பால் சுரப்பது போல நம் தேவைகளை பூமித்தாய் தருவாள். -தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870