சூலத்தில் அர்த்தநாரீஸ்வரர்
சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக சிவன், தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சிதந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் இருந்தும் காட்சி தருகிறார். இந்த வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரர் சேலம் அருகிலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயிலில் உற்சவராக அருள்புரிகிறார். தல வரலாறு: சிவத்தலயாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். அதில் ஒன்றே இந்தக் கோயிலிலுள்ள லிங்கமாகும். இந்த லிங்கம் காலவெள்ளத்தில் புதைந்து விட்டது. பிற்காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவனடியாரின் கனவில் தோன்றிய சிவன், தான் வசிஷ்டநதியின் தென்கரையில் மண்ணில் புதையுண்டு இருப்பதாக கூறினார். அவர் லிங்கத்தை தோண்டி எடுத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். சுவாமி அமைப்பு: கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார் தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அநியாயம் செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை 'ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர். அம்பாள் 'அகிலாண்டேஸ்வரி' என்ற திருநாமத்துடன் அருளுகிறாள். சூல அர்த்தநாரீஸ்வரர்: சக்தியுடன் சிவன் ஒன்று சேர்ந்துள்ள அம்சமே அர்த்தநாரீஸ்வரர். இத்தலத்தில் சக்திக்குரிய சூலத்திலும் சிவன் அமர்ந்துள்ளது விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி என்னும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார். தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னை நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. சிறப்பம்சம்: அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இரண்டும் ஒரே மண்டபத்தில் அருகருகில் அமர்ந்துள்ளது. பிரதோஷ காலத்தில் இவர்களை வணங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும். சிவனுக்கு பின் புறம் கிருஷ்ணர் மகாலட்சுமி யுடன் இருக்கிறார். பிரகாரத்தில் நின்ற நிலையில் நவக்கிரகங்கள், சுப்பிரமணியர், பஞ்சலிங்கங்கள், பைரவர், சூரியன், நாயன்மார்கள் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரம், மகாசிவராத்திரி, சனிப்பெயர்ச்சி.இருப்பிடம்: சேலத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 40 கி.மீ., தூரத்தில் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளது. ஆத்தூரில் இருந்து டவுன்பஸ்கள் செல்கின்றன.நடை திறப்பு: காலை 6 - 9 , மாலை 4 - 8 மணி.போன்: 04282 - 221 594.