உள்ளூர் செய்திகள்

காளசர்ப்ப தோஷம் இருக்கிறதா ? அனந்தீஸ்வரரை வணங்குங்க !

ஜாதகத்தில், சர்ப்ப கிரகங்களான ராகு, கேது ஆகியவை வேலைவாய்ப்பிலோ, திருமணத்திலோ, குழந்தைப்பேறு விஷயத்திலோ தடையை ஏற்படுத்தும். இதை 'காளசர்ப்ப தோஷம்' என்பர். இந்த தோஷமுடையவர்கள் 'அனந்தன்' என்ற நாகம் வழிபட்ட காட்டுமன்னார் கோயில் திருவனந்தீஸ்வரரை தரிசனம் செய்து தோஷ நிவர்த்தி பெறலாம். கடலூர் மாவட்டத்தில் இந்தத் தலம் உள்ளது.தல வரலாறு: அட்டநாகங்களில் (எட்டு நாகம்) ஒன்றான அனந்தன் இத்தல இறைவனை வழிபட இங்கு வந்தது. எனவே இவ்வூருக்கு 'திருவனந்தீஸ்வரம்' என்ற புராணப் பெயர் இருந்தது. தற்போது காட்டுமன்னார்கோயில் எனப்படுகிறது. ஒருகாலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகமாக இருந்தன. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், அனந்தீஸ்வரரை தனது  குலதெய்வமாக வணங்கியுள்ளான். சிறப்பம்சம்: கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றிலும்  வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன. தோஷ வழிபாடு: அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காளசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின்  பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம். குலம் செழிக்க நந்தாவிளக்கு: ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சோழப்பேரரசியுமான செம்பியன்மாதேவியாருக்கு திருமணம் நடந்த தலம் இது. எனவே அனந்தீஸ்வரர் கோயிலுக்கு, தன் பெயரால் நந்தாவிளக்கு அறக்கொடை அளித்துள்ளார். உத்தமசோழன் காலத்தில் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன் என்ற பழுவூர் அரசன், தன் தம்பிகண்டன் சத்துருபயங்கரன் என்பானின் ஆன்மசாந்திக்காக நந்தாவிளக்கு வைக்க மானியம் வழங்கியுள்ளான். இந்த விளக்குகளை ஏற்ற எண்ணெ# காணிக்கை கொடுத்தால் நம் குலம் செழிக்கும் எனபதும், நம் முன்னோரின் ஆசி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. நந்தியின் தலை: கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வங்கள் பெரும்பாலும் சிதைந்துள்ளன. முற்காலச் சோழர் காலத்தில் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்தி, பிற்காலப் படையெடுப்புக்கள், சூறையாடல்களால் சிதைக்கப்பட்டது. ஆனால், நந்தியின் தலை மட்டும் மிஞ்சியது. இந்தத் தலையை தென்புற திருச்சுற்று சுவரில் பதித்து வைத்துள்ளனர். தூண்களின் மத்தியில் காணப்படும் அன்னப்பறவைகளின் உருவம் உள்ள  சிற்பங்கள் மிக அரிய படைப்பாகும். நோய் தீர்க்கும் தலம்: சிலர் தீராத நோயால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு சுகமளிக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. சுந்தரபாண்டிய மன்னன் என்பவன் தொழுநோயால் அவதிப்பட்டு வந்தான். இந்நிலையில் அனந்தீஸ்வரர் கோயிலின் எதிர்புறமுள்ள சூரிய சந்திர புஷ்கரணியில் நீராடி, இறைவனை வணங்கி குணமடைந்தார். தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொள்வதால் சுகமடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. கோயில் அமைப்பு: மூலவர் அனந்தீஸ்வரர் கிழக்கு  நோக்கியும், சவுந்திரநாயகி அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சர்ப்பதோஷ நிவர்த்தி தலமான இங்கு, துர்க்கை சன்னதியும் இருப்பதால் ராகுகால பூஜை நடந்து வருகிறது. நின்ற நிலையில் உள்ள விநாயகர் சிலையைப்பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிரம்மா, சூரியன் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம். திருவிழா: வைகாசி விசாகம். திறக்கும் நேரம்: காலை 8.30- பகல் 12 மணி, மாலை 4.30- இரவு 8.30 மணி.இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து 26 கி.மீ.,  தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 40 கி.மீ., தூரத்திலும் காட்டுமன்னார்கோயில் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் உள்ளது. போன்: 94864- 57124.