உள்ளூர் செய்திகள்

குன்றத்தூர் முருகன்

தைப்பூசத்தை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வருவோமா!தல வரலாறு:திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணி சென்றார். வழியில், ஒரு குன்றின் அடிவாரத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். பிற்காலத்தில் குலோத்துங்க சோழன், ஆட்சி செய்தபோது, குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டினார். முருகனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம், மலையடிவாரத்தில் உள்ளது. இவர் 'கந்தழீஸ்வரர்' எனப்படுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர். இத்தலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வடக்கு நோக்கியிருக்கிறார். திருப்பரங்குன்றத்திலும் இவர் வடக்கு நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சேக்கிழார் பிறந்த ஊர்:84 படிகள் கொண்ட குன்றின் மீது கோயில் உள்ளது. முருகன் சந்நிதி நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சந்நிதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும். சந்நிதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். தைப்பூச விழா இங்கு சிறப்பாக நடக்கிறது. காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் உண்டு. கந்தசஷ்டி எட்டு நாள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம்நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாள் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் கோயில் இருக்கிறது. சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்காயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் சந்நிதிக்குச் சென்றுகாட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சந்நிதி இருக்கிறது.பிற சந்நிதிகள்:முருகன் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.இருப்பிடம்:சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர். பாரிமுனையில் இருந்தும் பஸ் உண்டு. திறக்கும் நேரம்:காலை 6.30-மதியம்12.30, மாலை 4-இரவு 8. போன்:044 - 2478 0436.