உள்ளூர் செய்திகள்

இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?

* கடவுளுக்கும், அவனது அடியார்களுக்கும் பணமுள்ளவர்கள் பொருள் வழங்க வேண்டும். ஏழைகள் அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். * வாழ்வில் துன்ப துயரங்களை அடைந்த பின்னர் தான் கடவுளைப் பலரும் தேடுகின்றனர். ஆனால், இளமையிலும், நன்றாக இருக்கிற காலத்திலும் இறைவனைத் தேடுபவனே பேறு பெற்றவன். * உங்கள் மனதில் குற்றம் இருப்பதாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள். நல்ல நினைவுகளை மனதில் இருத்திக்கொண்டால், இதற்கு அவசியமே இராது. * தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் துன்பமே அதிகரிக்கிறது.* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க இயலாது.* நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.* இந்த உலகம் இனிமையான தோட்டம். இங்கே இறைவனை நேசிப்பவனுக்கு கவலை கிடையாது. எப்போதும் இறைசிந்தனையில் இருப்பவன் எதற்கும் அஞ்சுவதில்லை. அவன் புண்ணியவானும் கூட.* மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மை அடைந்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.* உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.* ஏதாவது ஒரு உயிருக்கு மகிழ்ச்சியை உன்னால் அளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.* சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.* ஒரு பொருள் அற்பமாக இருந்தால் கூட, அதை இகழ்ந்து பேசக்கூடாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் <உங்களை மதிக்கும். செய்கிற செயல் மிக அற்பமானதாக இருந்தால் கூட, அதையும் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும்.* ஏதேனும் கஷ்டம் வந்து விட்டால், தனியே அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளை வேண்டுங்கள். அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு, உங்களுக்கு எல்லாவற்றையும் விளங்கும்படி செய்வான்.* மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே, ஒருவன் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் நல்ல செயல்களைச் செயலாக்கி விட வேண்டும். அதற்கென, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக் கூடாது.* நமக்கு முக்கியமானது அன்பே. இதன்மூலமே குடும்பம் முன்னேற வழியிருக்கிறது. * சந்தனத்தை தொட்டால் கை மணப்பது போல, இறைவனைத் தியானித்தால் மனம் மணக்கும்.கேட்கிறார் சாரதாதேவியார்