உள்ளூர் செய்திகள்

தீர்க்காயுள் வழங்கும் திருமால்

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் பரமேச்சுர விண்ணகரம் வைகுண்டப் பெருமாளைத் தரிசித்தவர்க்கு நீண்டஆயுள் வாழும் பாக்கியம் கிடைக்கும்.தல வரலாறு:விதர்ப்ப தேசத்தை ஆண்ட விரோசனன், முற்பிறவியில் பெற்ற சாபத்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தான். சிவ பக்தனான இவன், காஞ்சிபுரம் கைலாசநாதருக்கு யாகம் செய்து வழிபட்டான். மன்னனுக்கு அருளிய சிவன், விஷ்ணுவின் துவார பாலகர்களான பல்லவன், வில்லவன் இருவரையும் பிள்ளைகளாகப் பிறக்கச் செய்தார். இளவரசர்களாக பிறந்தாலும், விஷ்ணுபக்தர்களாக வளர்ந்தனர். மக்கள் நன்மைக்காக விரதம் அனுஷ்டித்து யாகம் செய்தனர். இவர்களது பக்தியைக் கண்டு மகிழ்ந்த விஷ்ணு, வைகுண்டநாதனாக காட்சியளித்தார். அதன் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது. மும்மாடக்கோயில்:பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு விஷ்ணு காட்சியளித்ததால், இந்த தலத்துக்கு பரமேச்சுர விண்ணகரம் என்ற பெயர் வந்தது. பெருமாள் அமர்ந்த, சயன, நின்ற கோலத்தில் முகுந்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மும்மாடக்கோயில் ஆகும். இக்கோயிலில் சுவாமி கருவறை, முதல் பிரகாரம் ஆகியன குடவறையாக உள்ளன. முன்மண்டபத்தில் கிழக்கு நோக்கி வைகுந்தவல்லித் தாயார் வீற்றிருக்கிறார். பிரகாரத்தில் இரண்டு மரங்களுக்கு கீழே ஆதிசேஷன் இருக்கிறார். இங்குள்ள தீர்த்தம் ஐரம்மத தீர்த்தம் எனப்படுகிறது. பரமபத நாதர் தனி சந்நிதியில் இருக்கிறார். இவரை வழிபட்டவர்க்கு பாவம் நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும். திருமணத் தடை நீங்கி விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், அவல், தயிர்சாதம் நைவேத்யம் செய்து நெய்தீபம் ஏற்றினால் நீண்ட ஆயுள் கிடைக்கும். இங்கு ஆண்டாளுக்கும் சந்நிதி உண்டு.பரத்வாஜரின் மகன்:பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஒன்றாக பூலோகம் வந்து தவம் செய்தனர். அத்திரி, பிருகு, காசிபர், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் தவத்திற்கு உதவினர். மூன்று தேவியரையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவசக்தியால் தேவியர்களை நெருங்க முடியவில்லை. அதனால், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பி வைத்தனர். அவள் மீது பரத்வாஜருக்கு ஆசை ஏற்பட்டது. ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வேடுவ வடிவில் வந்த விஷ்ணு, குழந்தைக்கு 'பரமேச்சுர வர்மன்' என பெயரிட்டு வளர்த்தார். திருமால் பக்தனான பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்தார். அனைத்தையும் கற்பதற்குள், அவனுக்கு இறுதிக்காலம் வந்து விட்டது. உயிர் காத்த விஷ்ணு:பரமேச்சுரவர்மனின் ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு, எமன் வரும் நேரத்தில் வடக்கு நோக்கி தலை வைத்துப் படுத்துக் கொண்டார். வடக்கே தலைவைத்தால் ஆயுள் குறையும் என்பர். 'உலகை காக்கும் விஷ்ணுவே இப்படி படுத்திருக்கிறாரே!' என குழம்பிய எமன், எழுந்திருக்கும் படி வேண்டினான். ''தன் பக்தன் பரமேஸ்வர வர்மனின் ஆயுளை அதிகரித்தால் தான் எழுவேன்,'' என அவர் அடம் பிடித்தார். வேறு வழியின்றி விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனுக்கு தீர்க்காயுள் வழங்கினான். இதன் அடிப்படையில் இத்தலத்துக்கு வருவோர் நீண்ட ஆயுள் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. பாசுரத்தில் மன்னன்:திருமங்கையாழ்வார், இங்கு மங்களாசாசனம் செய்யும்போது, ''பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே'' என்று கோயில் கட்டிய பரமேச்சுரப் பல்லவனின் பெருமையையும் சேர்த்து பாடியுள்ளார். பல்லவர்களின் போர்புரியும் திறனை குறிப்பிடும்போது அவர்கள் ஒலிக்கும் பறை விண் அதிரும்படி இருக்கும் என பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.திருவிழா:வைகாசியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசிஇருப்பிடம்:காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில். திறக்கும் நேரம்:காலை 6-11.30, மாலை 4- இரவு 8. போன்:044-2722 2702.சி.வெங்கடேஸ்வரன்