வீணை வித்யாம்பிகை
சரஸ்வதி பூஜை நன்னாளான இன்று, சிதம்பரம் தில்லைக்காளிகோயிலில் இருக்கும் வீணை வித்யாம்பிகையை (சரஸ்வதி) இங்கிருந்தபடியே தரிசிப்போமா!தல வரலாறு: சிவனுக்கும் சக்திக்கும் இடையே தங்களில் யார் சக்திமிக்கவர் என்று விவாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி,'சக்தி தான் பெரிது' என்று கோபத்துடன் வாதிட்டாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த, அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார். மனம் வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன், ''நீ காளியாக இருந்து அசுரர்களை அழிக்க வேண்டும். பின்பு, தில்லையில்(சிதம்பரம்) என்னை நோக்கி தவம் இரு. நான் வியாக்ரபாதர்,பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போதுநீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்,''என்றார்.அவ்வாறே அவள் செய்தாள். அவள் கோப சக்தியாக, 'தில்லைக்காளி' என்ற பெயரில் அமர்ந்தாள்.நான்கு முக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்த்தள்ள காளித் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, 'பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறாள்.பெண் தெட்சிணாமூர்த்தி: பிரகாரத்தில், நின்ற கோலத்தில் 'வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதி இங்கிருப்பது விசேஷம். போதாக்குறைக்கு கல்வி தெய்வமான, தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் 'கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரில் அருளுகிறார். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள்.திறக்கும் நேரம்: காலை 6.30- 12 மணி. மாலை 4.30- 8.30 மணி.இருப்பிடம்: சிதம்பரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து கடலூர் செல்லும் ரோட்டில் ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.போன்: 04144- 230 251.