யந்திர சனீஸ்வரர்
வேலுார் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் யந்திரம் பொருத்திய நிலையில் சிவலிங்க வடிவில் சனீஸ்வரர் இருக்கிறார். இவரை சனி ஹோரை நேரத்தில் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சனீஸ்வரருக்கு கோயில் கட்டினார். 'ஈஸ்வர' பட்டம் பெற்றவர் என்பதால் சிலையை சிவலிங்கத்தின் பாணம் போல உருவாக்கினார். காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே, திறந்த வெளியில் வழிபாடு நடந்தது. பிற்காலத்தில் யந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் 'யந்திர சனீஸ்வரர்' எனப் பெயர் பெற்றார். தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் லிங்க வடிவில் மூலவர் இருக்கிறார். சிலையின் மேல் பகுதியில் சூரியன், சந்திரனும், நடுவில் காகமும் உள்ளன. அறுகோண வடிவில் 'ஷட்கோண யந்திரம்' நடுவில் உள்ளது. ''நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. சிவனுக்குரிய வில்வத்தால் அர்ச்சனை செய்கின்றனர். சனிக்கிழமையில் சனி ஹோரை நேரமான காலை 6:00- 7.00 மணிக்குள் அபிஷேகம், கோ பூஜை, யாக சாலை பூஜை நடக்கிறது. சனீஸ்வரரின் தந்தையான சூரியனுக்கு ' பாஸ்கரன்' என்ற பெயருண்டு. இங்குள்ள தீர்த்தத்தை 'பாஸ்கர தீர்த்தம்' என அழைக்கின்றனர். இதை குடித்தால் சூரிய, சனி தோஷம் நீங்கும். தேர் ஒன்றை ஐந்து காகங்கள் இழுக்க, அதன் மீது பவனி வரும் சனீஸ்வரர் சிற்பம் முகப்பில் உள்ளது. ஆயுள் காலம், தொழிலை நிர்ணயம் செய்யும் கிரகம் சனி என்பதால் இங்கு ஏராளமானோர் வருகின்றனர். ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி பாதிப்பு நீங்க எள்தீபம் ஏற்றுகின்றனர். எப்படி செல்வது* திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., * வேலுாரில் இருந்து 41 கி.மீ., துாரத்தில் ஆரணி. அங்கிருந்து படவேடு செல்லும் வழியில் 9 கி.மீ., * திருவண்ணாமலை - வேலுார் சாலையில் (50 கி.மீ.,) உள்ள சந்தவாசல் சென்று அங்கிருந்து 3 கி.மீ.,விசஷே நாட்கள்: புரட்டாசி சனி, சனி பிரதோஷம், சனிப்பெயர்ச்சி விழாநேரம்: காலை 8:00 - 1:00 மணி; மாலை 3:00 - 7:00 மணி ; சனிக்கிழமைகளில் காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு : 04172 - 229 272அருகிலுள்ள தலம்: வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்