அனுமன் அளித்த ஆறுதல்
சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் 'கண்டேன் சீதையை' என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியைப் பெற்றதும் ராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது. ''பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். பிராட்டியோ தங்களின் திருநாமத்தை(ராமநாமம்) கணப் பொழுதும் மறக்காமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். உங்களை மறந்தால் தா@ன கஷ்டம் வரும். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது. இலங்கையில் இருந்து பிராட்டியை மீட்டு வருவது மட்டுமே நம் கடமை,'' என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார். ராமர் அவரை ஆரத்தழுவி,''அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?,'' என்றார். அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது.''பகவானே! என்ன சொல்லிவிட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று ராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையைக் கோதியபடி ராமர் ஆசி வழங்கினார். துளசிதாசர் ராமாயணத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.