சாதித்துக் காட்டிய சஞ்சய்!
'பரவாயில்லையே... மறுபடியும் தன் செல்வாக்கை நிரூபித்து விட்டாரே...' என, மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பந்தி சஞ்சய் குமார் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், தெலுங்கானா மாநில மக்கள். தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், பா.ஜ.,வின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக, பந்தி சஞ்சய் குமாரை, 2020ல் மாநில பா.ஜ., தலைவராக நியமித்தது, கட்சி மேலிடம். அவரும், மேலிட தலைவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, மிகவும் தீவிரமாக செயல்பட்டார். ஆனால், 2024ல் லோக்சபா தேர்தல் நடப்பதற்கு முன், திடீரென மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பா.ஜ., மேலிடத்தின் இந்த செயல்பாடுகள், அந்த கட்சியில் உள்ளவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தின. 'நன்றாக வேலை செய்தவரை ஏன் மாற்றினர்...' என முணுமுணுத்தனர். இந்நிலையில் தான், சஞ்சய் குமாரின் தொகுதிக்கு உட்பட்ட கரீம் நகர் மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ.,வுக்காக இறங்கி வேலை பார்த்தார், சஞ்சய் குமார்; இதனால், கரீம் நகர் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது. இதையடுத்து, 'சஞ்சய் குமாரை மீண்டும் மாநில அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்...' என, அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்ப துவங்கியுள்ளனர். 'அமைதியாக இருந்து சாதித்து விட்டாரே...' என, சஞ்சய் குமாரை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள்.