உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தினமலரின் மரபணுவிலேயே ஊறிப்போனது துணிச்சல்

தினமலரின் மரபணுவிலேயே ஊறிப்போனது துணிச்சல்

தினமலரின் வரலாறு என்பது வெறும் செய்திகளின் தொகுப்பு அல்ல; அது ஒரு போராட்டத்தின் வரலாறு. கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற போராட்டத்தின்போது, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும், வீரமிக்க குரலாக ஒலித்தவர் டி.வி. இராமசுப்பையர். அந்த துணிச்சலும், நேர்மையும், இன்று வரை தினமலரின் மரபணுவிலேயே ஊறிப் போயிருக்கிறது. 'எப்போதும் உண்மையின் பக்கம்' என்ற அதன் தாரக மந்திரம், வாசகர்களிடையே ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. நிறுவனரின் அந்த தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து, தற்போதைய ஆசிரியர் கி. இராமசுப்பு அவர்கள், தினமலர் நாளிதழை திறம்பட நிர்வகித்து வருகிறார். நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப, நாளிதழை எடுத்து செல்வதிலும், அதன் தரம் குறையாமல் பாதுகாப்பதிலும், இவரது நிர்வாகத் திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது. செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதிலும், எதற்கும் அஞ்சாமல், உண்மைகளைத் துணிந்து சொல்வதிலும் தினமலர் இன்றும் முதன்மையுடன் விளங்குகிறது. தினமலரின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம், அதன் பரவலான மற்றும் தனித்துவமான பதிப்புகள் ஆகும். வாசகர்களுக்கு தங்கள் ஊர் செய்திகளே முதன்மையானது என்பதை உணர்ந்து, உள்ளூர் செய்திகளுக்காகவே, பிரத்யேகமாக வழங்கப்படும், நான்கு பக்க இணைப்பு, அந்தந்த பகுதி மக்களின், அன்றாட வாழ்வியல், நிர்வாக மாற்றங்கள் மற்றும் தேவைகளை, மிக துல்லியமாக படம் பிடிக்க உதவுகிறது. செய்திகளை உயிரோட்டமாக்க, முதன் முதலில் வண்ண அச்சு முறையை புகுத்தியது முதல், வாசகர்கள் எளிதாக வாசிக்கும் வகையில், செய்திகளை பிரித்து வழங்கும், நேர்த்தியான வடிவமைப்பு வரை, அனைத்திலும் தினமலர் முன்னோடியாக திகழ்கிறது. பொது செய்திகளை தாண்டி, வணிகம், பங்கு சந்தை மற்றும் முதலீடு தொடர்பான புதிய செய்திகளை துல்லியமாகவும், உடனுக்குடனும் தருவதில் தினமலர் முதன்மையுடன் உள்ளது. இது வாசகர்களின் பொருளாதார விழிப்புணர்விற்கு பெரும் துணையாக இருக்கிறது. செய்தித்தாள் ஒரு அறிவு சுரங்கமாக இருக்க வேண்டும் என்பதில், 'தினமலர்' உறுதியாக உள்ளது. குறிப்பாக, வருங்காலத் தலைமுறையினரான மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்காக, தினமலர் ஆற்றி வரும் பணி ஈடு இணையற்றது. மாணவர் பதிப்பான 'பட்டம்', பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும், ஒரு அற்புதமான கல்வி பாலம். வாழ்க தினமலர்! வளர்க அதன் தமிழ் தொண்டு மு.மகேஷ்குமார் துணை மேயர், சென்னை மாநகராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை