உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தர்மம் மீறாமல் செய்தி வழங்கும் தினமலர்

தர்மம் மீறாமல் செய்தி வழங்கும் தினமலர்

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க போராடியவருள் ஒருவர், தேசிய சிந்தனையாளர், தீவிர தமிழ்ப் பற்றாளர் தேசாபிமானி டி.வி. ராமசுப்பையரால் நிறுவப்பட்டு, பவளவிழா காணும் தினமலர் நாளிதழ் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், நிருபர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உண்மையின் உரைகல்லாக, தேசியத்தின் குரலாக, ஜனநாயக துாணாக 75 ஆண்டுகளாக தமிழகத்தில் அறம் தவறாது, அன்றாட செய்தி வாசிப்போரின் உற்சாகம் குறையாமல், தெளிவாக, துல்லியமாக, தெளிந்த நீரோடை போல துாய்மையாக, தனித்துவம் குறையாமல், தர்மம் மீறாமல் செய்தி வழங்குவது தினமலர் நாளிதழின் சிறப்புகளில் ஒன்று. 'காகிதம் செய்வோம் நல்ல ஆயுதம் செய்வோம்' என்ற மகாகவி பாரதி வரிகளுக்கேற்ப, காகிதத்தை ஜனநாயக ஆயுதமாக மாற்றி, அன்றாட நிகழ்வு முதல் அரசியல் நிகழ்வு வரை பாரபட்சமின்றி அனைத்தையும் செய்தியாகத் தந்து ஜனநாயகத்திற்கு சிறப்பு சேர்த்த முதன்மை நாளிதழ் தினமலர் என்பது மிகையில்லை. வர்த்தக நோக்கோடு செய்திகளை வெளியிடாமல், வாசிப்போரின் சிந்தனை தெளிவுற, நாட்டு நடப்புகளை நாகரிகமாகவும், நம்பகத்தன்மை மாறாமலும் வழங்குகிறது. குழந்தைகளுக்கான சிறுவர் மலர், வார இதழில், பால்ய பருவத்திலேயே பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம், தேசிய சிந்தனை, தெய்வபக்தி போன்ற உயர்வான பண்புகளை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆன்மிக உணர்வு, அறம்சார் சிந்தனையை வளர்க்கும் நீதிக்கதைகள் வெளியிட்டு நல்லொழுக்கத்தை கற்பிப்பது போல நற்பணி செய்வதும் சிறப்பு. தமிழகத்தில் ஆயிரமாண்டுகளைக் கடந்தும் அறத்தின் அடையாளமாக விளங்கும் நமது புராதன ஆலயங்களின் சிறப்புகள் குறித்தும், பாரத பண்பாட்டின் வேர்களாக விளங்கும் பாரம்பரிய திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்தும், அவற்றை மூதாதையர் காலம்தொட்டு கொண்டாடும் மரபுகள் குறித்தும், சாஸ்திர, சம்பிரதாய, சடங்குகள், வழிபாட்டு முறைகள் குறித்தும் அவற்றுக்கான காரணங்களை ஆன்றோர், சான்றோர் பெருமக்களின் அருளுரைகளோடும் ஆன்மிக மலரில் வெளியிட்டு, நமது பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பது, அடுத்த தலைமுறையினருக்கு ஆன்மிகக் கருவூலமாய் விளங்கி, மண்ணின் மரபுகளைக் காக்க தினமலர் ஆற்றும் பணிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அரை நுாற்றாண்டையும் தாண்டி, தினமலர் இதழில் தேனருந்தும் வாசகன் என்பதே எனக்கான சிறப்பென எண்ணுகிறேன். ஏனெனில் பத்திரிக்கை என்பது அதை வாசிப்போரின் ஆர்வத்தை மட்டுமல்ல, அறிவை வளர்ப்பதிலும் அளப்பறிய பங்களிப்பு இருக்கவேண்டும். அந்த வகையில் தினமலர் அறிவுசார் பெட்டகமாக விளங்குகிறது. அரசியல் அடையாளங்களைக் கடந்து, தேசமே பெரிதென கருதும் பத்திரிக்கையாக, விசாலமான பரந்த சிந்தனையோடு பல்துறை செய்திகளை ஆராய்ந்து, உறுதி செய்த செய்திகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாச அனுபவத்தை தரும் அறிவாசானாய் விளங்குகிறது. உள்ளங்கை அலைபேசி வழியாக உலக நிகழ்வுகளை வினாடிதோறும் கண்களுக்குக் காட்சியாக, செவிகளுக்குச் செய்தியாக தரும் இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும், தினமும் அதிகாலை அனைவரையும் வாசிக்கத்துாண்டுகிறது. அத்தகைய தினமலர் இதழ், பவளவிழா கடந்து வைரவிழா கொண்டாடி, பல நுாறாண்டு விழாக்களையும் கடந்து, தர்மத்தின் குரலாக ஒலிக்க வாழ்த்துகிறேன். -எச்.ராஜா தேசிய செயற்குழு உறுப்பினர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி