போதை ஊசி மருந்தகத்தில் அதிகாரிகள் ஆய்வு
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள சில தனியார் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், 'அவில்' ஊசி மருந்துகள் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. மது போதைக்கு மாற்றாக, இளைஞர்கள் இதை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.தொடர்ந்து, விழுப்புரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் குழுவினர், விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அதில், அலர்ஜிக்கு பயன்படுத்தும் அவில் ஊசி மருந்துகள் அதிகளவு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, சென்னை மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பித்து, நீதிமன்ற வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.