கூவம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க தடுப்பு வேலி அமைப்பு
திருவள்ளூர்:கூவம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் கேசாவரத்தில் துவங்கும் கூவம் ஆறு, திருவள்ளூர், மணவாள நகர், சென்னை வழியாக வங்க கடலில் கலக்கிறது. துவங்கும் இடத்தில் மழைநீருடன் வரும் ஆறு, மணவாள நகர், வெங்கத்துார், அரண்வாயல்குப்பம், பூந்தமல்லி வரை, கூவம் ஆற்றில் ஆங்காங்கே குப்பை மற்றும் கழிவுநீர் வெளியேற்றி வருகின்றனர். இந்த குப்பை மற்றும் கழிவுநீர் அனைத்தும், ரயில் நிலையத்திற்கு செல்லும் தரைப்பாலம் அருகே குவிந்துள்ளது. இதனால், ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. கடந்த ஜூன் மாதம், கூவம் ஆற்றை கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, 'ஹோட்டல் மற்றும் கடைகளில் இருந்து கூவம் ஆற்றில் குப்பை கொட்டாமல் தடுக்க வேண்டும். மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார். ஆனால், கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியத்தால், குப்பை அகற்றப்படாமலும், கழிவுநீர் கலப்பதாலும், மீண்டும் கூவம் ஆற்றில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, மணவாளநகர் செல்லும் தரைப்பாலத்தின் இருபகுதியிலும், குப்பை கொட்டாமல் இருக்க தடுப்பு கம்பு அமைத்து, கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.