தினமலர் செய்தி எதிரொலி பகுதி நேர ரேஷன் கடை சீயமங்கலத்தில் திறப்பு
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம் கிராமம். இக்கிராம காலனி பகுதியில், 150 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்கள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை நீண்ட காலமாக திம்மராஜம்பேட்டை ரேஷன் கடையில் வாங்கி வருகின்றனர்.திம்மராஜம்பேட்டை - சீயமங்கலம் இடையே ஒரு கி.மீ., துாரம் இடைவெளி உள்ளதால், மழை மற்றும் வெயில் நேரங்களில் சீயமங்கலம் பகுதியினர், ரேஷன் கடைக்கு சென்று வர சிரமபடுகின்றனர்.இதனால், சீயமங்கலம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் அவ்வப்போது வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், சீயமங்கலம் காலனியில், பகுதி நேர ரேஷன் கடை நேற்று திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் கல்பனா உட்பட பலர் உடனிருந்தனர்.