ஏலமன்னா பழங்குடியின கிராமத்திற்கு ஒளி : தினமலர் செய்தி எதிரொலி
பந்தலுார்: பந்தலுார் அருகே ஏலமன்னா பழங்குடியினர் கிராமத்திற்கு மின்வசதி கிடைத்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பன்னிக்கொல்லி பழங்குடியின கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகள் சேதமான நிலையில், புதிதாக குடியிருப்புகள் கட்ட வசதி இல்லாத சூழல் இருந்தது. இந்த கிராமத்தில் குடியிருந்து வந்த, 19 குடும்பங்களுக்கு ஏலமன்னா பகுதியில், இடம் ஒதுக்கீடு செய்து, நகராட்சி சார்பில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்து, 6 மாதங்கள் கடந்தும், மின் வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் பழங்குடியின மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, பழங்குடியில நல தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மக்களை தாசில்தார் அலுவலகத்திற்கு வரவழைத்து, மின் வசதிக்கான விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக மின்வசதி ஏற்படுத்தி தர அறிவுறுத்தினார். இந்நிலையில், நேற்று மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தலைமையிலான மின் வாரிய பணியாளர்கள் இணைந்து, கிராமத்தில் உள்ள, 19 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். இருளில் சிக்கி தவித்த பழங்குடியின மக்களுக்கு, 'ஒளி' கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். மக்கள் கூறுகையில், ' இப்பகுதிக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தால் பெரும் பயனாக இருக்கும்,' என்றனர். இதற்கும் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.