உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ஜே.என்., சாலை கால்வாயில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்

ஜே.என்., சாலை கால்வாயில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்

திருவள்ளூர்:ஜே.என்., சாலையில், மழைநீர் கால்வாய் அடைப்பிற்கு காரணமாக இருந்த கழிவுநீர், வெளியேற்றப்பட்டது. சென்னை, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து திருப்பதி, திருத்தணி செல்லும் வாகனங்கள் அனைத்தும், திருவள்ளூர் ஜே.என்., சாலையை பயன்படுத்தி வருகின்றன. அந்த சாலையில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இச்சாலையின் இருபுறமும், மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். ஆனால், அந்த கால்வாயில் அடைப்பு காரணமாக, மழைநீர் வெளியேற வழியின்றி, கால்வாயிலேயே பல ஆண்டுகளாக தேங்கியிருந்தது. அதனால், மழை காலத்தில், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து, சாலையில் குளம் போல் தேங்கியது. இந்நிலையில், சில நாட்களாக, ஜே.என்., சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகில், மழைநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால், சாலையோரம் நடந்து செல்ல முடியாமல், அப்பகுதியில் வசிப்போரும், மருத்துவமனைக்கு வருவோரும், இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அரசு மருத்துவமனை அருகில், மழைநீர் கால்வாயில் உடைப்பு ஏற்படுத்தி, தேங்கிய கழிவு நீரை, காக்களூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாக, நெடுஞ்சாலை துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !