தி.மு.க.,வை சேர்ந்த, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: ஆட்சியை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் முதல்வர் விஜய் இருக்கிறார். அதனால் தான், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி கொண்டிருக்கின்றனர். கவர்னர் உரையின்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்படும். ஆனால், இப்போது தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டு, மரபு மீறப்பட்டுள்ளது. த.வெ.க.,வும், பா.ஜ.,வும் ஏதோ ஒரு உடன்பாட்டிற்கு வந்திருப்பதையே இது காட்டுகிறது. டவுட் தனபாலு: தேசிய கீதத்தை ரெண்டு முறை பாடியதுல, என்ன குறைஞ்சு போயிடுச்சு...? ரெண்டு முறை எழுந்து நிற்க கால் வலிக்குதேன்னு கவலைப்படுறீங்களா அல்லது ஆளுங்கட்சி மீது ஏதாவது குறை சொல்லணுமேன்னு குற்றம் சாட்டுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது! தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: பிரதான, வலுவான எதிர்க்கட்சியாக நாம் செயலாற்ற வேண்டும். சட்டசபையில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து, சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும். நம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். 'ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்ய தி.மு.க.,வினர் ஓடி வருவர்' என, மக்கள் கூற வேண்டும். டவுட் தனபாலு: அது சரி... இப்ப நீங்க சொன்ன அறிவுரையை எல்லாம், அஞ்சு வருஷம் ஆளுங்கட்சியா இருந்தப்பவே உங்க கட்சியினருக்கு சொல்லி, அவங்களும் கேட்டிருந்தால், இன்றைக்கு எதிர்க்கட்சி வரிசைக்கு வந்திருக்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்: ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரையை கேடயமாக பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன் என, ஒரு குடும்பம் மட்டுமே ஊறித்திளைக்கும், 'சன்' ஆதன சிம்மாசனத்தில் வாரிசு தலைவர் உதயநிதி சரிந்து கிடக்கிறார். அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும், ஜனநாயக 'சோபா'க்கள் பற்றி அவருக்கு தெரிந்திருக்காது. கடந்த மே 4ல், வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. டவுட் தனபாலு: தி.மு.க.,வில் பல முறை எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களா இருந்த சீனியர்கள் பலர் இருக்க, எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் உதயநிதி, வாரிசு அடிப்படையில் தானே அங்க வந்திருக்காரு... அதனால, தி.மு.க.,வில் வாரிசு சிம்மா சனத்தை ஒழிக்கவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!