தி.மு.க., நிர்வாகி மனைவிக்கு இரு இடங்களில் அரசு ஊதியம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இடைப்பாடி: தி.மு.க., நிர்வாகியின் மனைவி இரு இடங்களில் அரசு ஊதியம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், ராயணம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன்; தி.மு.க., கிளை செயலர். இவரது மனைவி தமிழரசி. கோரணம்பட்டி ஊராட்சி துாய்மை காவலர். அதற்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் பெறுகிறார். மேலும், அதே ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஏரி வேலை செய்வதாக கணக்கு எழுதப்பட்டு, அதற்கும் சம்பளம் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து, கோரணம்பட்டியை சேர்ந்த மூர்த்தி உள்ளிட்டோர், பி.டி.ஓ., இளங்கோவிடம் புகார் அளித்தனர். அதில், 'ஆளுங்கட்சியை சேர்ந்த கிளை செயலரின் மனைவி என்பதால் தான், இரு இடங்களில் அரசு பணத்தை சம்பளமாக பெற்று வருகிறார்' என, கூறப்பட்டிருந்தது. 'ஒரே நேரத்தில், ஒருவர் இரு இடங்களில் எவ்வாறு வேலை பார்ப்பது' என, இளங்கோவிடம் கேட்டபோது, ''இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்; விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இரு வேலைகளிலும் சம்பளம் பெற்றிருந்தால், ஒரு சம்பளம் திருப்பி பெறப்படும்,'' என்றார்.