உதட்டை கடித்து குதறிய கணவன்; மனைவிக்கு 16 தையல்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரா; உத்தர பிரதேசத்தில் மனைவியுடன் சண்டை போட்ட கணவன் வாக்குவாதத்தின் முடிவில், மனைவியின் உதட்டை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.,யின் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பூசான் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். எந்தவொரு காரணமும் இன்றி, மனைவியுடன் சண்டை போடுவதை விஷ்ணு வழக்கமாக வைத்திருந்தார்.கடந்த 24ம் தேதி மாலை, பணியில் இருந்து வீடு திரும்பிய அவர், மீண்டும் தன் மனைவியிடம் தேவையில்லாமல் சண்டை போட்டார். பதிலுக்கு அமைதியாக இருக்கும்படி மனைவி கூறிய நிலையில், அவரை சரமாரியாக தாக்கினார்.தடுக்க வந்த தன் சகோதரியையும் விஷ்ணு தாக்கியதாக கூறப்படுகிறது. மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்திய அவர், ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மனைவியின் உதட்டை கடித்து குதறினார்.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு காயம்பட்ட உதட்டில், 16 தையல்கள் போடப்பட்டன.இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், அப்பெண்ணிடம் நடந்ததை கேட்டறிந்தனர். பேச முடியாத நிலையில், தனக்கு நேர்ந்த அவலங்களை எழுத்துப்பூர்வமாக அவர் தெரிவித்தார்.இதையடுத்து, கணவன் விஷ்ணு, அவரின் சகோதரர் மற்றும் தாயாரை தேடி போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் வீட்டில் இருந்து மாயமாகினர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.