ரூ.76.31 லட்சம் ஜி.எஸ்.டி.,! கிறுகிறுத்து போன ஆசிரியர்
வேலுார்: ஜி.எஸ்.டி., வரி நிலுவை, 76.31 லட்சம் ரூபாய் செலுத்தக் கூறி, அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், அவர் வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர் கூட்டம், எஸ்.பி., சிவராமன் தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். அப்போது, வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடியாத்தம் அடுத்த பத்திரபல்லி அரசு பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். என் ஆதார் மற்றும் பான் கார்டை வைத்து போலியாக ஜி.எஸ்.டி., பதிவு எண் தயாரித்து, ஏ.எஸ்., டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை மர்ம நபர்கள் துவங்கி உள்ளனர். இதன் மூலம், 76.31 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முடக்கப்பட்ட என் வங்கி கணக்கை விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.