திருப்பூர்; திருப்பூரில் தங்கள் பகுதியில் மதுக்கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என, பெண்கள் மனு அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே, ரங்கநாதபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டுவருகிறது. நோயாளிகளுக்கும், அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதால், மதுக்கடையை அகற்றவேண்டும் என, இந்திய கம்யூ., கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.அதேநேரம், மதுக்கடை அமைந்துள்ள அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 20 பேர், மதுக்கடை தொடர்ந்து செயல்படவேண்டும் என கோரி மனு அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:கடந்த 30 ஆண்டுகளாக செயல்படும் மதுக்கடையால், குடியிருப்பு பகுதி மக்களாகிய எங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. பாரில் பணிபுரிவோர், எங்கள் பகுதிக்குள் புதிய, சந்தேக நபர்கள் நுழைந்தால், கேள்வி கேட்கின்றனர். எங்களுக்கு மதுக்கடை பாதுகாப்பும் அளித்துவருகிறது.தனியார், தங்கள் சொந்த காரணங்களுக்காக, வெளிநபர்களை பணம் கொடுத்து அழைத்துவந்து, மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். பார் நடத்துவோரிடம் பணம் கேட்டு மிரட்டிய வீடியோவும் வெளியாகியிருக்கிறது.எங்களுக்கு மதுக்கடையால் எந்த தொல்லையும் இல்லை. எங்கள் கணவன்மார்களும், பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.குறைகேட்பு கூட்ட அரங்க போர்டிகோவில், திடீரென தரையில் அமர்ந்து பெண்கள் தர்ணாவிலும் ஈடுபட்டனர். ''சிலரது துாண்டுதலின் பேரிலேயே மதுக்கடைக்கு ஆதரவாக பெண்கள் மனு அளித்துள்ளனர்; இது தவறான போக்கு'' என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.