காங்.,கிற்கு அல்வா கொடுக்கும் தி.மு.க.,! எஸ்.ஆர்.த்ராவிட், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு குழு அதிகாரத்தில் இருக்கும்; மற்றொரு குழு அந்த அதிகாரத்தை கைப்பற்ற முயலும். இந்த இரு குழுக்களுக்கும் இடையில் நடைபெறும் முடிவில்லா போராட்டமே அரசியல்!அதேநேரம் அந்த அதிகாரத்தை எவருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது மக்கள் தான்! இதை அறியாமல், இரண்டு பூனைகள் ஓர் அப்பத்திற்கு சண்டை போட்டுக் கொண்டிருப்பது போல், காங்கிரசும், தி.மு.க.,வும் அதிகார பங்கீடு குறித்து சண்டை போடுவது வேடிக்கை தான்!மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தி.மு.க., தலைமை உணர வேண்டும்.கடந்த 1947 முதல், 1977 வரை மத்தியில் நேருவின் குடும்ப காட்டாட்சி; அதன்பின் குஜ்ரால், தேவகவுடா என குழப்பான கூட்டாட்சி; பின், 1998- - 2004 வரை வாஜ்பாயின் தலைமையில் ஓரளவு தெளிவான கூட்டாட்சி இருந்தது.அதன்பின், 2004 -- 14ல் காங்., - தி.மு.க.,வின் ஊழல் கூட்டாட்சி; பின், 2014 முதல் மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.இப்படி ஆட்சியும் அதிகாரமும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன. இங்கு எந்தக் கட்சியும் நிரந்தரமாக கோலோச்சியதில்லை.அப்படியிருக்கும் போது, அதிகாரத்தில் பங்கு தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதுடன், 40 தொகுதிகள் கேட்டு காங்., விடாப்பிடியாக தொங்கியும், 28 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க விரும்பவில்லை தி.மு.க.,தி.மு.க.,வை பொறுத்தவரை தேர்தலில் ஓட்டு வாங்க மட்டுமே கூட்டணி தேவை; ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சி, கல்லாப் பெட்டியை நிரப்ப எவருக்கும் பங்கு தராது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அன்றைய காங்., தலைவி சோனியாவிற்கு அல்வா கொடுத்தே, ஐந்தாண்டுகள் தன் மைனாரிட்டி ஆட்சியை நிறைவு செய்தவர். அவர் வாரிசான ஸ்டாலின் மட்டும் அதிகாரத்தில் பங்கு கொடுத்து விடுவாரா... அல்வா தான் கொடுப்பார்!கமேனி பாசம் ஓட்டாகுமா? பி.எஸ்.ரங்கஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஈரான் மீது இஸ்ரேல் - - அமெரிக்க நாடுகள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குகிறது. இந்த வளைகுடா நாடுகள் தான், தங்கள் நாட்டில், 10 ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவிற்கு ராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்துள்ளன. இந்நிலையில், கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும், தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், அமெரிக்கா- - இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, சென்னையில் ஊர்வலம் சென்றுள்ளனர். அதேநேரம், அமெரிக்காவுக்கு நட்புகரம் நீட்டியுள்ள வளைகுடா நாடுகளை குறை சொல்லவோ, கண்டிக்கவோ முன்வரவில்லை. அதுமட்டுமல்ல... கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பஹல்காமில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டபோது, இக்கட்சிகள் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக இந்தியா பதிலடி கொடுத்த போது கூட, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியவர்கள் தான் இவர்கள். வங்கதேசத்தில் அப்பாவி ஹிந்துக்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றனர். அதுகுறித்து இக்கூட்டம் இதுவரை மறந்தும் கூட வாய் திறந்ததில்லை. ஆனால், எங்கோ இருக்கும் ஈரானுக்கு ஆதரவாக இங்கே குரல் கொடுக்கின்றனர். ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது! இலவசத்திற்கு ஆசைப்பட்டு இவர்களுக்கு ஓட்டுப் போட்டால், சொந்த நாட்டிலேயே நீங்கள் குரல் அற்றவர்களாக போய் விடுவீர்கள் என்பதற்கு இவையெல்லாம் சிறு உதாரணங்கள். வந்தபின் வருந்துவதை விட, வருவதை தடுப்பதே புத்திசாலித்தனம்! lll வெட்கமற்றவர்கள்! என்.எஸ்.வெங்கட் ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில மாதங்களாக அரசியல்கட்சியின் கூட்டணி குறித்தும், எந்த அரசியல்வாதி எந்த கட்சிக்கு தாவுவார் என்ற ஆருடங்களுமே பெரும்பாலும் செய்தி தாள்களிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த நடிகர் கமல்ஹாசன், இப்போது, தி.மு.க.,வுடன் தன்னை இணைத்துக் கொண்டு, அக்கட்சியின் ஆசிர்வாதத்துடன், ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டார். அதேபோன்று, 'பா.ஜ.,வுடன் இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என்று சூளுரைத்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோ, தேர்தல் நெருங்கியதும், பா.ஜ.,வுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். தங்களை ஏழை பங்காளர்கள் என்று கூறி கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளோ, ஊழல் எனும் கடலில் நாள் தோறும் மூழ்கி முத்தெடுக்கும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, கூடுதல் சீட்டுக்காக கையேந்தி நிற்கின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று உருகி, அந்த அம்மாவின் மனம் குளிர தி.மு.க.,வை வசைபாடியோர், இன்று தி.மு.க.,வில் அடைக்கலமாகி, அ.தி.மு.க.,வை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும், அ.தி.மு.க., வில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த பன்னீர்செல்வம், 40 ஆண்டுகளாக கட்சி விசுவாசியாக தன்னை காட்டிக் கொண்டவர், தி.மு.க.,வை தன் ஜென்ம எதிரியாக பாவித்த ஜெயலலிதாவின் தொண்டன் என்று கூறிக் கொண்டவர், இப்போது எந்த குற்ற உணர்ச்சியும், வெட்கமும் இல்லாமல், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இங்கு, அரசியல்வாதி எனும் தனிமனிதர்களின் சுயநலம் தானே உள்ளது? இதில் கொள்கை எங்கே இருக்கிறது? தாங்கள் நடத்தும் நாடகத்தை கண்டு களிக்கும் கூட்டமாக மக்களை கருதி விட்டனர், அரசியல்வாதிகள். இங்கு மக்களுக்கான அரசியல் தலைவர்களும் இல்லை; மக்களுக்கான அரசியலும் இல்லை. ராஜ்யசபா சீட்டுக்கும், இரண்டு எம்.எல்.ஏ., - எம்.பி., சீட் வாங்கி, கல்லா கட்டவே பெரும்பாலான கட்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதில் இவர்கள் கொள்கைவாதிகளாம்; சமூகநீதியை காக்க வந்தவர்களாம்! வெட்கம் கெட்டவர்கள்! l