உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  துரைமுருகன் சொத்து கணக்கை வெளியிடுவாரா?

 துரைமுருகன் சொத்து கணக்கை வெளியிடுவாரா?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொது வாழ்க்கையில் ஒழுக்கம் அவசியம்; என் 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்துக் காட்டினால், இங்கேயே நெருப்பில் குதித்து விடுகிறேன்' என்று பேசியுள்ளார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு தகரப் பெட்டியை தலையில் சுமந்து கொண்டு சென்னை வந்த தன்னை, எம்.எல்.ஏ., ஆக்கியவர் கருணாநிதி என்று கூறி, ஒருமுறை சட்டசபையில் தேம்பி தேம்பி அழுது, சட்டசபையையே சோகத்- தில் மூழ்க வைத்தவர் தான் இந்த துரைமுருகன். ஒரு தகரப் பெட்டியுடன் அகதியாக சென்னை வந்த துரைமுருகனுக்கு, இன்று காட்பாடியில் வீடுகள், கல்வி நிறுவனங் கள், சென்னை கோட்டூர்புரத்தில் சொந்தமாக பல வீடுகள் என, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் எப்படி வந்தது? இத்தனையும் துரைமுருகன் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த சொத்தா அல்லது அவரது முப்பாட்டனார் சம்பாதித்து வைத்திருந்த சொத்தா? துரைமுருகன் தன் 50 ஆண்டுகால சொத்து விபரங்களை கூட சொல்ல வேண்டாம்; கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்த்த சொத்து விபரத்தை சொன்னாலே போதுமே... துரைமுருகன் பொது வாழ்க்கையில் எவ்வளவு துாய்மையானவர் என்பதை தெரிந்து கொள்ள! கடந்த 2021 தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் போது, துரைமுருகன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 30.80 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், 74.16 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஐந்து ஆண்டுகளில், 44 கோடி ரூபாய் அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றால், நீர்வளத்துறை அமைச்சருக்கு, அப்பணம் எப்படி வந்தது? இப்பணத்திற்கு மக்களுக்கு கணக்கு காட்டினாலே போதும்; துரைமுருகன் நெருப்பில் குதிக்க வேண்டிய அவசியம் இல்லை. சொத்துக் கணக்கை துரைமுருகன் வெளியிடுவாரா? ****************

அழிந்து விடாது!

ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க.,வை பா.ஜ., ஒருநாள் முழுமையாக விழுங்கிவிட்டு, தமிழகத்தில் ஒரு 'பினாமி' ஆட்சியை நிறுவும்' என, நீலிக்கண் ணீர் வடித்து வருகின்றனர், காங்கிரஸ் கட்சியினர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களிடமிருந்து, அதிகாரத்தை அபகரிப்பதில் உருவான கட்சி தான் இன்றைய இந்திரா காங்., அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு, 356-ஐ முறைகேடாகப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில அரசுகளை குரூரமாக கலைத்து ரசித்த இக்கட்சிக்கு, ஜனநாயக மாண்புகள், அரசியல் நெறிமுறைகள் குறித்து மற்றவர்களுக்குப் பாடம் நடத்த எந்த அருகதையும் இல்லை. கடந்த 1976-ல் எமர்ஜென்சியின் போதும், 1991லும் தி.மு.க., ஆட்சியை கலைத்தது, காங்கிரஸ். இது, கூட்டாட்சி தத்துவத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் காங்., நடத்திய நேரடித் தாக்குதல்கள் என்றே கூறலாம்! இதைவிட வெட்கக்கேடான ஜனநாயகப் படுகொலை, 1984 ஆக., மாதம் ஆந்திராவில் அரங்கேறியது. அப்போதைய முதல்வர் என்.டி.ராமராவ் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, கவர்னர் ராம் லால் வாயிலாக ராமராவ் ஆட்சியை கலைத்தது, காங்., சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தாமல், கவர்னர் மாளிகையை ஆளுங்கட்சியின் கிளை அலுவலகமாக மாற்றிய பெருமை, காங்கிரசையே சாரும். இந்த ஜனநாயக சீர்கேடுகளுக்கு சவுக்கடி கொடுத்து, முற்றுப்புள்ளி வைத்தது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புதான். கடந்த 1989-ல் கர்நாடகாவில் எஸ்.ஆர்.பொம்மையின் ஜனதா தள அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட இவ்வழக்கில், 'ஓர் அரசின் பெரும்பான்மை என்பது சட்டசபையில் வாக்கெடுப்பு மூலமே நிரூபிக்கப்பட வேண்டும்; கவர்னரின் கற்பனையிலோ அல்லது டில்லியின் உத்தரவிலோ அல்ல' என, உச்ச நீதிமன் றம் 1994-ல் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது. சட்டப்பிரிவு, 356-ஐ தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மட்டும் வராமல் போயிருந்தால், அதிகார வெறி பிடித்த காங்கிரஸ் கட்சி, இன்னும் எத்தனையோ ஜனநாயக அரசுகளை ஈவு இரக்கமின்றி பலியிட்டிருக்கும்! உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அரசியல் சாசன ரீதியாக ஒரு, 'லட்சுமண ரேகை'யை கிழிக்கும் வரை, எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் செயல்பட்ட காங்., இன்று ஜனநாயக நாகரிகம் குறித்து பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. எனவே, தமிழகத்தில், 'பினாமி' ஆட்சி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் காங்கிரஸ், முதலில் தன் கடந்த காலத் தவறுகளான ஆட்சிக் கலைப்புகள், கவர்னர்களை வைத்து நடத்திய சதித்திட்டங்களுக்கு நாட்டு மக்களிடம் விளக்கம் சொல்லி விட்டு, பின் எச்சரிக்கை விடுக்கட்டும்! வரலாறு மிகக் கொடூரமான சாட்சி; அதை தன் வசதிக்காக மாற்றிக் கொள்வதால் மட்டும் கறைபடிந்த காங்., கடந்த காலம் அழிந்துவிடாது! ******************கட்சி மாற மாட்டார்கள்! என்.வேணுகோபாலன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தற்போதுள்ள லோக்சபா இடங்களின்படி பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், என் விருதுநகர் தொகுதியை ஒரு சகோதரிக்காக விட்டுக் கொடுப்பேன்; ஆனால், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கள் வாரணாசி, காந்தி நகர் தொகுதிகளை விட்டுக் கொடுப்பரா?' என்று கேட்டுள்ளார், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் தொகுதியை எவருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று எப்போது கூறினராம் அல்லது மாணிக்கம் தாகூருக்கு மட்டும், 'ஸ்பெஷலாக' போன் செய்து சொன்னரோ? பெண்களுக்கான, 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் தோல்வி அடைந்து விட்ட தைரியத்தில், 'விட்டுக் கொடுப்பேன்' என்று உதார் விட்டுக் கொண்டிருக்கிறார், மாணிக்கம் தாகூர். இவர் விட்டுக் கொடுப்பதாக இருந்தால், இவரது மனைவி, மகள், சகோதரிக்கு தான் விட்டுக் கொடுப்பாரே தவிர, தன் உயிர் இருக்கும் வரை இத்தொகுதியை வேறு எவருக்கும் விட்டுத்தர மாட்டார். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள்; அந்த அமைப்பு வாரணாசியில் மோடியும், லக்னோ காந்திநகர் தொகுதியில் அமித் ஷாவும் போட்டியிடக் கூடாது என்று கட்டுப்படுத்தினால், அதை அப்படியே ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வரே தவிர, காங்கிரசாரைப் போல் கட்சி மாறவோ, சுயேச்சையாகவோ போட்டியிட மாட்டார்கள்! ****************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை