மரகதம்
சிம்மன், கலிபோர்னியா, அமெரிக்கா நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: அமெரிக்காவில், நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையன்று தேர்தல்
நடக்கும். இதன்படி, நாளை அங்கு தேர்தல் நடக்கிறது. ஓட்டு சீட்டுகளை, 18
வயதிற்கு மேல் ஆனவர்களுக்கு வீட்டுக்கே தபால் வாயிலாக அனுப்பி
விடுகின்றனர். ஓட்டுகளை போட பூத்துகளுக்கு போகலாம் அல்லது தபாலிலும்
அனுப்பலாம்.ஓட்டு சீட்டுகளை அனுப்ப, தபால் கவர்களையும் கூடவே
அனுப்பி விடுகின்றனர். வீட்டு வாசலில் உள்ள தபால் பெட்டியில் வைத்து
விட்டால், போஸ்ட்மேன் வந்து எடுத்து செல்கிறார். மேலும், ஒரே
பேப்பரில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, செனட்டர், மேயர், பள்ளிக்கல்வி
அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என்று எல்லா உயர்மட்ட அதிகாரிகள்
பெயர்களையும் அச்சடித்து அனுப்பி விடுகின்றனர். அதிலும், மக்கள்
வேண்டினால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ஓட்டு சீட்டுகளை அச்சிட்டு
தருகின்றனர்.மக்களே, அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்து
அனுப்புகின்றனர். அதனால், போலீஸ் அதிகாரிகளோ, கல்வி அதிகாரிகளோ
அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; அரசியல்வாதிகளின்
ஆட்டமும் இவர்களிடம் செல்லாது. எல்லாரும் இங்கு சுதந்திரமாக செயல்பட
முடிகிறது.இந்த அதிகாரிகள் மக்களுக்குத்தான் பதில் சொல்ல வேண்டும்.
பள்ளிக்கல்வி அதிகாரிகள் சரியாக செயல்படா விட்டால், அடுத்த தேர்தலில்,
துாக்கி எறிந்து விடுவர். அதனால், இந்த அதிகாரிகள் அரசியல் தலையீடு
இல்லாமல், தங்கள் கடமையை சரிவர செய்கின்றனர்.இதனால், அரசு
அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்து, எந்த காரியத்தையும் முடிக்க வேண்டிய
அவசியம் இல்லை. இதுபோல நம் ஊரிலும் கொண்டு வந்தால், லஞ்சம், ஊழலை ஒழிக்க
முடியும்.இல்லாத திராவிடம் இனி எதற்கு?
அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம் தமிழர் கட்சி சீமான், 'திராவிடமே இல்லை' என்கிறார். வி.சி., கட்சி திருமாவளவன், 'தி.மு.க.,வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில், ஒட்டுமொத்த திராவிட அடையாளங்களையும் எதிர்ப்பது, குதர்க்கமான வாதம்; மக்களை நாம் குழப்பக்கூடாது' என்கிறார்.குழப்பம் யாருக்கு? மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் வரை, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள், மெட்ராசுடன் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒன்றாக இருந்தன. அதைத் தான் திராவிடம் என்ற பொதுப் பெயரில், அனைவரும் குறிப்பிட்டு வந்தனர்.திராவிட இயக்கங்களின் தாய் அமைப்பான நீதி கட்சி, சென்னை மாகாணத்தைத் தான் ஆட்சி செய்தது. அக்கட்சிக்கு ஈ.வெ.ரா., பொறுப்பேற்றபோது, அண்ணாதுரையின் பரிந்துரையில், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது; அது, அந்த காலத்திற்கு பொருத்தமானதாக இருந்தது.தி.க.,விலிருந்து அண்ணாதுரை பிரிந்தபோது, திராவிடர் என்று இனத்தைக் குறிப்பிடாமல், திராவிட என்று நிலத்தைக் குறிக்கும் வகையில், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை துவக்கினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் தங்கள் தாய்மொழி அடிப்படையில் இயங்கத் துவங்கிவிட்டன; திராவிடம் என்ற சொல்லை எங்கும், எதிலும், எப்போதும் அவர்கள் பயன்படுத்துவதே இல்லை.அப்படி இருக்கும்போது, நாம் மட்டும் திராவிடம் என்ற இல்லாத பெயரை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருப்பதேன்? நாமும் மொழி, இன அடிப்படையில் தானே இயங்க வேண்டும்?மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பின், தி.மு.க.,வின் பெயரை, 'தமிழக முன்னேற்ற கழகம்' என அண்ணாதுரை மாற்றி அமைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்; இதைத்தான் சீமான் கேட்கிறார்.சமீபத்தில் கட்சி துவக்கிய நடிகர் விஜய் கூட, 'தமிழக வெற்றிக் கழகம்' என்றே பெயர் சூட்டியிருக்கிறார். 'தமிழ்நாடு' என்று அண்ணாதுரை பெயர் மாற்றம் செய்தபின், நம் மாநிலமும், தமிழ் மொழி, இன அடிப்படையில் இயங்குவதே சரியாக இருக்கும்; அதுவே கவுரவம்.திராவிடம் என்ற சொல்லை தேவையில்லாமல் நாம் பயன்படுத்தி வருவது, நம் தாய்மொழி, இனம், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதை, திராவிட இயக்கங்களும், கூட்டணி கட்சிகளும் இனியாவது உணருமா?-தீய சக்திகளை முறியடிப்போம்!
வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலங்களில், இந்திய விமானங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன.விமானங்கள் புறப்படுவதில், வந்து சேர்வதில், தாமதங்கள் ஏற்படுகின்றன. விமான சேவை, கட்டுப்பாடு மென் பொருட்களுக்குள் தவறானவர்கள் உட்புகுந்து, பிரச்னைகளை ஏற்படுத்துவது; ரயில் தண்டவாளங்களில் பாறைகள், உருளைகள், பழைய டயர்கள் போன்ற தடைகளை வைத்தல்; இணைப்புகளைத் துண்டித்து விட்டு, விபத்துகளை ஏற்படுத்த முயல்வது; பிரபலமான பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்புவது போன்ற சதிகள், தேச விரோத செயல்பாடுகள் அடிக்கடி நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது.விபத்துகள் நடந்தவுடன், இப்படிப்பட்ட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், உடனே மத்திய அரசை விமர்சிப்பதும், ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவதும், விவாத மேடைகளில் மத்திய அரசை சரமாரியாக விமர்சிப்பதும், வாடிக்கையாகி விட்டது. தேர்தல் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகம் நடைபெறுகின்றன. உற்று நோக்கினால், தேச விரோத சக்திகள், பா.ஜ., அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து, இத்தகைய செயல்களை செய்து வருகின்றனவோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், மிரட்டல் கடிதங்கள் அனுப்புபவர்கள் யார், இவர்கள் யாரால் இயக்கப்படுகின்றனர் என்பன போன்ற விபரங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்க, பெரும்பாலான மென் பொருட்கள் சேவை செய்யும் கம்பெனிகள், ஒத்துழையாமல் இருப்பது துரதிருஷ்டவசமே.இது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், பதவி வெறி பிடித்து அவர்களுக்கு துணைபோகும் எதிர்க்கட்சிகள் உள்பட, அவர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் பாய வேண்டும். இஸ்ரேலைப் போல், இந்தியாவிடமும் வாலாட்ட முடியாது என்பதை, தேச விரோத சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.